எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்
(பறகஹதெனிய)
சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பள்ளி வாசல்களின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. என்ற அடிப்படையிலும் குறித்த பகுதியின் ஜமாஅத்தினருக்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க வேண்டும் என்ற பிரதான நோக்காக கொண்டு பிரதேசத்தின் ஆண் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் குருநாகல், பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் முயற்சியில் பள்ளிவாசல் வளாகத்தில் கல்வி நிறுவனம் கடந்த 09 ஞாயிறு அன்று அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

இதில் பிரதேசத்தின் கல்வி பயிலும் தரம் 06 தொடக்கம் 13 வரையான சகல ஆண் மாணவர்களுக்கும் இலவசமாக கல்வியை கற்பதற்கு தனியான குழுக்களாகவும் மேலும் ஆசிரிய, வளவாளர்களைக் கொண்டு வகுப்புக்களையும், கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து நடாத்துவதற்குமான கல்விச் சூழலை உருவாக்கி கொள்வதற்க்கான வாய்ப்பாக இது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகள் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் மேற்படி கல்வி நிறுவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவர் எஸ்.எம். இபாம் மற்றும் செயலாளர் எம்.எம். இர்ஷாத் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களின் பங்கேற்ப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் ஆங்கில மொழிக்கான பிரதி கல்விப் பணிப்பாளர், கல்லூரியின் அதிபர், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உலமாக்கள்,புத்திஜீவிகள். பாடசாலை அபிவிருத்தி, மற்றும் பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
