பாலநாதன் சதீசன்
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரால்
பாடசாலை மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபர் அவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் (11.02.2025) காலை 8 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.
குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் – தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை தயாரிக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் குறித்த அதிபரை வலயத்துடன் இணைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ் விசாரணை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன் , தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது. இதற்கான பிரதிகள் வடமாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுனர் செயலகம், ஆளுனர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு குறித்த மகஜரினை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
பொன்விழாவை குழப்பிய அதிபரே வெளியேறு, அழிக்காதே அழிக்காதே மாணவச்செல்வங்களின் கல்வியை அழிக்காதே, அபிவிருத்தி கணக்கிலிருந்த 17 இலட்சம் எங்கே? மோசடியில் மூழ்கிய அரக்கனே! பாடசாலையில் இருந்து வெளியேறு? சாதிக்க துடிக்கும் மாணவச் செல்வங்களை தடுக்காதே? மாகாண அமைச்சே ஊழல் நிரூபிக்கப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரச சொத்துக்களை ஊழல் செய்யதே? போன்ற வாசங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.