சம்பள அதிகரிப்பு, மானியங்களுக்கு 21 ஆம் திகதிவரை தடை

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னரே வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட திடீர் சம்பள அதிகரிப்புக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மானியங்கள் நிவாரணங்களையும் தற்போதைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும், எனினும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி வரையில் அவற்றை நடைமுறைபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு தடையில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *